குருதி பிசுபிசுக்கும் கொலைக்களத்தில் கூத்து, கும்மாளமா? -கவிஞர் தாமரை

  
குருதி பிசுபிசுக்கும் கொலைக்களத்தில் கூத்து, கும்மாளமா?
தடுக்கவேண்டும் தமிழ்த் திரையுலகம்!


குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறி்த்த கதை பழையது.குழியில் போட்டுப்புதைத்துவிட்டு மேலே ஏறிக் கூத்தாடும் கதை புதியது.வருகின்ற ஜுலை 3,4,5 ஆம் தேதிகளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இதுதான்அரங்கேறப்போகிறது. ஆம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களைமொத்தமாகக் கொன்று புதைத்தவர்கள் கும்மாளமிடத்தான் ஐய்ஃபா (IIFA) விருது வழங்கும் விழாவைக் கொழும்புக்கு மாற்றியுள்ளனர்.

தென்கொரியத் தலைநகர் சியோலில் நடப்பதாக இருந்த சர்வதேச இந்தியத்திரைப்படக்கழக விருது விழாவை சந்தடியின்றிக் கொழும்புக்கு மாற்றியதில்இந்திய அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது. கொழும்பின் கையில் படிந்துள்ளதமிழனின் இரத்தக்கறையைத் துடைத்து, தன் பாவத்தையும்மறைத்துக்கொள்வதே அது! இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) இந்த விழாவில் வைத்து பல ஆதாய வாசல்களைத் திறக்கவும், இலங்கைச் சந்தையில் விரிவாக வலைவீசவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழர் பகுதிகளில் மறுநிர்மாணம் என்ற பெயரில் கிடைக்கப்போகும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 'கன்ட்ராக்டுகள்'மீது குறி வைத்துள்ளது. புதிய செல்பேசி சந்தைக்காகவும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
மூன்று நாள் விழாவில் ஒருநாள் படங் காட்டுவதற்காம்! ஒருநாள் வணிகஒப்பந்தங்களுக்காம்! ஒருநாள் 20 - 20 கிரிக்கெட் கேளிக்கைக்காம்! எல்லாவற்றிலும் கவர்ச்சிக்குக் குறைவைக்காமல் இந்தியத் திரைப்படத்தாரகைகளின் ஆட்டம் பாட்டம் இருக்குமாம்!

ஐய்ஃபாவின் முதல் விருது விழா 2000-ல் இலண்டனில் நடைபெற்றது. இதுபுகழையும் பணத்தையும் வற்றாமல் அள்ளிக்கொடுக்கும் அட்சயபாத்திரம் என்று அப்போதே தெரிந்துவிட்டது. அதிலிருந்தே கனடா, அயர்லாந்து, தென்கொரியா போன்ற வளர்ந்த நாடுகள் 'இந்நிகழ்ச்சியை எங்கள் நாட்டில் நடத்துங்கள்'என்று கேட்க ஆரம்பித்துவிட்டன. இந்நிகழ்ச்சியின் மூலமாகத் தங்கள் சுற்றுலாத் துறை வளம்கொழிக்கும் என்பது இந்நாடுகளி்ன் கணக்கு. நான்காண்டுகளுக்கு முன்பே ஐஃப்பா விழாவைத் தொலைக்காட்சியில் கண்டுகளித்தவர்கள் 45 கோடிப் பேர். உலக அளவில் ஆஸ்காருக்கு அடுத்த இடம் ஐய்ஃபாவுக்குத்தான்.

இந்த விழாவை நடத்த விரும்பும் ஒவ்வொரு நாடும் அதற்காக ஐய்ஃபாஅமைப்புக்கு 560 கோடி ரூபாய் தரத் தயாராக உள்ளன. ஐய்ஃபா -2010 விழாவைநடத்துவதற்கான போட்டியில் 2009 இறுதிவரை அயர்லாந்துதான் முன்னணியில் நின்றது. பிறகு தென்கொரியா மூக்கை நீட்டி முந்திக்கொண்டது. 2010 ஜனவரி 26 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தென்கொரிய அதிபர் லீமியூங்பாக் அவர்களிடம் இதற்கான அறிவிப்பை இந்தியத்தரப்பு அதிகாரப்பூர்வமாக வழங்கியது.

2010 பிப்ரவரி 27 வரை இந்தப் பட்டியலிலேயே கொழும்பு இல்லை. பிறகுதான்கொழும்பின் பெயர் அடிபட்டது. உடனே அதற்குத்தான் என்று உறுதியும்செய்யப்பட்டுவிட்டது. "இது இலங்கையின் மாபெரும் உலக சாதனை"என்றுசொல்லி மகிழ்கிறார் அந்நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சர் அச்சாலாஜகோடா.

கொழும்பு ஐய்ஃபா விழாவின் முதன்மைத் தூதர் அமிதாப் பச்சன். அவரும்ஷாருக்கானும் ஐஸ்வர்யாராயும் உலகப் புகழ்பெற்ற பாலிவுட் கலைஞர்களும்மேடையில் தோன்றி, இலங்கையில் 'அழகும் அமைதியும்குடிகொண்டிருப்பதை'உலகமே பார்க்க உதவப்போகிறார்களாம். உலக மக்கள்தீர்ப்பாயம் (people's tribunal) டப்ளினில் வைத்து இலங்கையைப்போர்க்குற்றவாளியாக அறிவித்த இரண்டு மாதங்களில் எப்படி 'அழகும்அமைதியும்' அங்கு குடிகொண்டன என்பதை அவர்கள்தான் விளக்கவேண்டும்.

தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று அமிதாப் விலகிக்கொண்டதாக ஒரு செய்தி! அது உறுதியானால் மகிழ்ச்சி! மற்றவர்களும் விலகிக்கொண்டு, விழாவை வேறிடத்தில் நடத்த வழி செய்யவேண்டும். (சல்மான்கான் தான் இப்போதைய தூதர் என்பது கடைசிச் செய்தி!)

சர்வதேச இந்தியத் திரைப்பட விழா என்று பெயருக்குச் சொல்லப்பட்டாலும், பெரும்பாலும் இந்தித் திரைப்பட விழாவாகவே இதுவரை நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை தமிழ்த் திரைக் கலைஞர்களையும் இழுக்கச் சந்தடியின்றிஒரு முயற்சி நடைபெறுகிறது. மணிரத்னத்தின் 'ராவணன்'கொழும்பு விழாவில்திரையேறும் என்று வந்த செய்தியை அவர் மறுத்திருக்கிறார். ஃபிக்கியின் ஊடக/ வணிகக்கேளிக்கைப் பிரிவின் தலைவர் கமலஹாசன் அவர்களையும்ரஜனியையும் ரஹ்மானையும் கொழும்பு ஆட்கள் தனித்தனியாக அணுகிஅழைத்ததாகவும் இவர்கள் மறுத்துவிட்டதாகவும் ஒரு செய்தி. "தமிழன் ரத்தம் படிந்த கொழும்பில் விழா நடத்த நாங்கள்தானா கிடைத்தோம்?"என்று சூடாகக் கேட்டாராம் பிரகாஷ்ராஜ். இந்தச் செய்திகள் எல்லாம் உண்மையாக இருக்கவேண்டும் என்பதே நமது விருப்பம்.

ஆனால், இது போதாது. தமிழ்த் திரைப்பட அமைப்புகள் உடனடியாக களமிறங்கி, இந்திய அளவில் யாரும் கொழும்பு விழாவில் கலந்துகொள்ள விடாமல் செய்ய வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலையைத்தான் நம்மால் தடுக்கமுடியவில்லை. கொலைக்களத்தில் கூத்தடிப்பதையாவதுதடுக்கலாந்தானே? இது நம் தமிழுறவுகளுக்கு ஆறுதலாக மட்டுமல்ல; கொழும்புக்கும் அதன் இந்தியக் கூட்டாளிகளுக்கும் நம் உணர்வுகளைச் சொல்லி எச்சரிப்பதாகவும் அமையும் அல்லவா?

இன அழிப்புப்போரை நிறுத்தக்கோரி தமிழ்த்திரையுலகம் போராடியதை யாரும்மறந்திருக்க முடியாது. இராமேசுவரத்திற்குச் சென்று சிங்களவனுக்குக்கேட்கட்டும் என்று குரல்கொடுத்தோம். நடிகர்கள், தொழிலாளர்கள், சின்னத்திரைக் கலைஞர்கள் என்று அடுத்தடுத்து உண்ணாவிரதப் போராட்டம்செய்தோம். பாரதிராஜா,செல்வமணி, மணிவண்ணன், சீமான், அமீர்போன்றவர்கள் திரையுலகின் முழு வலிமையோடும் தமிழக மக்களைத்தட்டியெழுப்பப் பாடுபட்டதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எல்லாமேமுடிந்துவிட்டது என்று சோர்ந்துவிடவோ ஓய்ந்துவிடவோ கூடாது. ஐய்ஃபா விழா கொழும்பில் நடைபெற முடியாமல் செய்ய நம்மால் முடியும். கோலிவுட்டின் கோரிக்கையை பாலிவுட்டால் அலட்சியப்படுத்த முடியாது.

நிறவெறி தாண்டவமாடிய தென்னாபிரிக்க வெள்ளை அரசைத்தனிமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த அதே இந்தியாதான், இப்போதுதமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசு உலகில்தனிமைப்பட்டுவிடாமல் பாதுகாத்து வருகிறது. இந்தியா செய்வது பச்சைஅயோக்கியத்தனம் என்று உணர்த்த இது சரியான தருணம், சரியான வாய்ப்பு! விழிப்புடன் செயற்பட வேண்டிய தருணத்தில் தூங்கிவிட்டுப் பிறகு என்னசெய்யவியலும்?

சீனாவில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்துக்கான சுடர் இந்தியா வந்தபோது, அதைஏந்தி ஓடிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பெயர்களெல்லாம்மறந்துவிட்டது. திபெத்தின் சீன அரசு நடத்திவரும் அடக்குமுறைக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையில் சுடர் ஏந்த மறுத்த இந்தியக் கால்பந்து வீரர் பெய்ச்சுதங்பாட்டியாவின் பெயர் எல்லோருக்கும் நினைவிருக்கிறது.

பாட்டியாவால் சீன ஒலிம்பிக்கைத் தடுக்க முடியவில்லை. ஆனால், தமிழ்த்திரைப்படக் கலைஞர்கள் மனது வைத்தால் ஐய்ஃபா -2010 கொழும்பில்நடைபெறாமல் தடுக்க முடியும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் - செய்தக்க
செய்யாமை யானும் கெடும்

என்ற குறளை நினைவுபடுத்தி, என் சக திரைப்படக் கலைஞர்களை ஆதரவுதருமாறு அழைக்கிறேன்.

சென்னை -24
15-05-2010

தங்கள் உண்மையுள்ள
தாமரை...

நன்றி கவிஞர் தாமரை,தமிழ் நதி...

Comments

வலையுலகத்திற்கு ரீ-என்ட்ரியா... வாங்க கெளதம்... வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்...